எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பில் கிரவுடர்கட்டுரைகள்

அமைதியின் ஜெபம்

கிரீன் பேங்க் என்பது மேற்கு வர்ஜீனியாவின் கரடுமுரடான அப்பலாச்சியன் மலைகளில் உள்ள ஒரு சிறிய சமூகம். இந்த நகரம் அப்பகுதியில் உள்ள பல சிறிய நகரங்களை போலிருந்தாலும், ஒரு பெரிய வித்தியாசமுமிருந்தது. அங்கே 142 குடும்பங்களுக்கும் இணைய வசதி கிடையாது. இந்த கிரீன் பாங்கில் உள்ள தொலைநோக்கி வானத்தில் தொடர்ந்து செயல்படுவதற்கு, அருகிலுள்ள வை-பை அல்லது அலைபேசி கோபுரங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் குறிக்கீட்டை தடைசெய்துள்ளனர். அதனால் கிரீன் பேங்க், வட அமெரிக்காவில் தொழில்நுட்ப இரைச்சலற்ற இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது .

 

சில சமயங்களில், அமைதியான சூழலே முன்னோக்கிச் செல்வதற்கான சிறந்த வழியாகும்; குறிப்பாக தேவனுடனான நமது உறவில். இயேசுவே பிதாவுடன் பேசுவதற்கு அமைதியான, ஒதுங்கிய இடங்களுக்கு சென்றதன் மூலம் நமக்கு முன்மாதிரியை விட்டுச் சென்றுள்ளார். லூக்கா 5:16ல், “அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்” (லூக்கா 5:16) என வாசிக்கிறோம். அவர் அடிக்கடி அவ்வாறு செய்தார். இது கிறிஸ்துவின் வழக்கமான நடைமுறையாகும். மேலும், இது நமக்கு சரியான முன்மாதிரியாக அமைகிறது. இவ்வுலகத்தின் சிருஷ்டிகர் தனது பிதாவை இவ்வளவாய் சார்ந்திருந்தால், நாம் எவ்வளவாய் அவரை சார்ந்திருக்க வேண்டியதாயிருக்கிறது!

 

தேவனின் பிரசன்னத்தில் புதுபெலன் பெற அமைதியான இடத்திற்கு செல்லுகையில், அவருடைய பெலத்தால் புதுப்பிக்கப்பட்டு தொடர்ந்து முன்னேற நம்மை ஆயத்தப்படுத்துகிறது. அத்தகைய இடத்தை இன்று நீங்கள் எங்கே காணலாம்?

தியாகத்தை நினைவுகூருதல்

ஞாயிற்றுக்கிழமை காலை வழிபாட்டைத் தொடர்ந்து, எனது மாஸ்கோ ஹோஸ்ட் என்னை கோட்டைக்கு வெளியே உள்ள ஒரு உணவகத்தில் மதிய உணவுக்கு அழைத்துச் சென்றார். வந்துசேர்ந்தவுடன், திருமண உடையில் புதுமணத் தம்பதிகள் வரிசையாக கிரெம்ளின் சுவருக்கு வெளியே யாரென்று தெரியாத இராணுவ வீரரின் கல்லறையை நெருங்குவதை நாங்கள் கவனித்தோம். அவர்களுடைய அந்த மகிழ்ச்சியான நாளில், அந்த மகிழ்ச்சிக்கு காரணமான இராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும்பொருட்டு அவ்வாறு செய்வது அவர்களின் வழக்கம். அந்த புதுமணத் தம்பதிகள் அங்கே சென்று கல்லறையில் மலர் வளையம் வைத்து, புகைப்படம் எடுத்துக்கொள்வதை பார்க்க ஆச்சரியமாய் இருந்தது. 

நம்முடைய வாழ்க்கையில் நிறைவை உண்டாக்கும்பொருட்டு தியாகமாய் தங்களை அர்ப்பணித்தவர்களுக்கு நன்றிசெலுத்துவதற்கு நாமெல்லாரும் கடமைப்பட்டிருக்கிறோம். அந்த தியாகங்கள் அனைத்தும் முக்கியமற்றவைகள் அல்ல, அதேநேரத்தில் அவைகள் மிகவும் முக்கியமானவைகளும் அல்ல. சிலுவையின் அடிவாரத்தில் இயேசு நமக்காக செய்த பெரிய தியாகத்தைப் பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கை எந்த அளவிற்கு முழுமையாக இரட்சகருக்குக் கடன்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள துவங்குகிறோம். 

கர்த்தருடைய பந்தியில் இடம்பெற்றிருக்கும் அப்பமும் திராட்சை ரசமும், இயேசுவின் சிலுவை தியாகத்தை நம்மை நினைவுகூரச்செய்கிறது. பவுல், “நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்” (1 கொரிந்தியர் 11:26) என்று எழுதுகிறார். கர்த்தருடைய பந்தியை அநுசரிக்கும் அந்த நாள் முழுவதிலும், இயேசு நமக்குள்ளும் நமக்காகவும் செய்த தியாகத்தை நாம் நினைவுகூரப் பிரயாசப்படுவோம்.

கதை சொல்

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மகன் ராபர்ட் டோட் லிங்கன், மூன்று முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றார்: அவரது சொந்த தந்தையின் மரணம் மற்றும் ஜனாதிபதிகள் ஜேம்ஸ் கார்பீல்ட் மற்றும் வில்லியம் மெக்கின்லியின் படுகொலைகள்.

ஆனால் வரலாற்றின் மிக முக்கியமான நான்கு நிகழ்வுகளில் அப்போஸ்தலனாகிய யோவான் பங்கேற்றிருக்கிறார்: இயேசுவின் கடைசி இராப்போஜனம், கெத்சமெனேயில் கிறிஸ்துவின் பாடுகள், சிலுவையில் அறையப்படுதல் மற்றும் அவரது உயிர்த்தெழுதல். இந்த சம்பவங்களை அவர் நேரில் சாட்சியிட்டதற்கான காரணத்தை யோவான் நன்கு அறிந்திருந்தார். யோவான் 21:24ல் “அந்தச் சீஷனே இவைகளைக்குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்” என்று யோவான் எழுதுகிறார். 

தன்னுடைய 1 யோவான் நிருபத்தில் யோவான் இதை மறுவுறுதி செய்துள்ளார். அவர் “ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப் பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்” (1:1) என்று எழுதுகிறார். யோவான் தான் நேரில் கண்ட சாட்சியங்களை எழுதும்படிக்கு ஏவப்படுகிறார். ஏன்? “நீங்கள் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்” (வச. 3) என்று பதிலளிக்கிறார். 

நம் வாழ்வின் நிகழ்வுகள் ஆச்சரியமானதாகவோ அல்லது சாதாரணமானதாகவோ இருக்கலாம், ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும் தேவன் அவற்றை ஒழுங்குபடுத்தி நம்மை சாட்சியாய் நிறுத்துகிறார். கிறிஸ்துவின் அருளிலும் ஞானத்திலும் நாம் இளைப்பாறும்போது, வாழ்க்கையின் ஆச்சரியமான தருணங்களிலும் அவருக்காகப் பேசுவோம்.

நீலக்கல் திருச்சபை மணிகள்

நீலக்கல் பாறை என்பது ஆச்சரியமான ஒரு பாறை. அதை அடைக்கும்போது, அதில் சிதறும் சில நீலக்கற்கள் இசையொலி ஏற்படுத்தும். “மணியோசை” என்று பொருள்படும் மேன்க்ளோசோக் என்ற ஒரு வெல்ஷ் கிராமத்தில், பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்த நீலக்கற்களை தேவாலய மணிகளாகப் பயன்படுத்தினர். இங்கிலாந்தின் பிரபலமான ஸ்டோன்ஹென்ச் என்ற நீலக்கற்பாறை மிச்சங்கள், இசையை ஏற்படுத்தும் விதமான அமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க தோன்றுகிறது. சில ஆராய்ச்சியாளர்கள், ஸ்டோன்ஹென்சில் இடம்பெற்றுள்ள இந்த நீலக்கற்கள் அதிலிருந்து இருநூறு மைல் தொலைவில் அமைந்திருந்த இந்த மேன்க்ளோசோக் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கணிக்கிறார்கள். 

இசையை ஏற்படுத்தும் இந்த நீலக்கற்கள் என்பது தேவனுடைய படைப்பில் ஒரு ஆச்சரியமாய் திகழ்கிறது. இயேசு குருத்தோலை ஞாயிற்றில் எருசலேமுக்குள் பிரவேசிக்கும்போது சொன்ன காரியத்தை நினைவுபடுத்துகிறது. ஜனங்கள் இயேசுவைச் சுற்றிலும் கூச்சலிட, அவர்களை அதட்டும்படிக்கு மார்க்கத் தலைவர்கள் இயேசுவை கேட்கிறார்கள். இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக, “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 19:40) என்கிறார். 

நீலக்கற்களினால் இசையெழுப்பக்கூடும் என்றால், கல்லுகளே சிருஷ்டிகரை கூப்பிடும் என்று இயேசு சொல்லுவதை கருத்தில்கொண்டால், நம்மை உண்டாக்கி மீட்டுக்கொண்ட நம்முடைய நேசருக்கு எவ்வளவாய் நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்! அவர் நம் அனைத்து துதிகளுக்கும் பாத்திரர். அவருக்கு துதி செலுத்த பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருள்செய்வாராக. அனைத்து சிருஷ்டியும் அவரை பணிகின்றன.

நண்பர்கள் மற்றும் எதிரிகள்

அறிஞர் கென்னத்.இ.பெய்லி, சர்வதேச கூடுகையில் ஒரு வித்தியாசமான போக்கைப் பின்பற்றிய ஒரு ஆப்பிரிக்க நாட்டின் தலைவரைப் பற்றிக் கூறினார். அவர் இஸ்ரேலுடனும் அதைச் சுற்றியுள்ள நாடுகளுடனும் நல்ல உறவை ஏற்படுத்தினார். இந்த ஆபத்தான சமநிலையை அவரது நாடு எவ்வாறு கையாள்கிறது என்று யாரோ அவரிடம் கேட்டபோது, ​​அவர் "எங்கள் நண்பர்களை நாங்கள் தேர்வு செய்கிறோம். எங்கள் எதிரிகளை [எங்களுக்காக] தேர்ந்தெடுக்க எங்கள் நண்பர்களை நாங்கள் அனுமதிப்பதில்லை” என்று பதிலளித்தார்.

அது புத்திசாலித்தனமானது மற்றும் யதார்த்தமான நடைமுறை. அந்த ஆப்பிரிக்க நாடு சர்வதேச அளவில் முன்மாதிரியாக இருந்ததை போல, பவுல் தன் வாசகர்களும் தனிப்பட்ட விதத்தில் செய்ய ஊக்குவித்தார். கிறிஸ்துவால் மாற்றப்பட்ட வாழ்க்கையின் குணாதிசயங்களைப் பற்றிய நீண்ட விளக்கத்தின் மத்தியில், “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். ரோமர் 12:18” என்றார். நாம் பிறரிடம் கொண்டிருக்கும் உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்படி, நம் எதிரிகளை நாம் நடத்தும் விதம் கூட (வவ. 20-21) தேவன் மீதான நமது நம்பிக்கை மற்றும் சார்ந்திருப்பை வெளிப்படுத்துகிறதென வலியுறுத்துகிறார்.

எல்லோருடனும் சமாதானமாக வாழ்வது எப்போதும் சாத்தியமாகாது (ஆகையால்தான், பவுல் "கூடுமானால்" என்கிறார்). ஆனால் தேவனுடைய ஞானம் நம் வாழ்க்கையை வழிநடத்த அனுமதிப்பதே இயேசுவின் விசுவாசிகளாகிய நமது பொறுப்பு (யாக்கோபு 3:17-18), அதனால் நம்மைச் சுற்றியுள்ளவர்களோடு சமாதானம் செய்பவர்களாக நாம் உறவாடுகிறோம் (மத்தேயு 5:9). சமாதான பிரபுவைக் கௌரவிக்க இதைவிட வேறு என்ன வழி இருக்க முடியும்?

தகவலும் ஆதாரமும்

டோரிஸ் கியர்ன்ஸ் குட்வின் ஆபிரகாம் லிங்கனைப் பற்றி ஒரு புத்தகம் எழுத முடிவு செய்தபோது, ​​அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதியைப் பற்றி ஏற்கனவே சுமார் பதினான்காயிரம் புத்தகங்கள் எழுதப்பட்டிருப்பது அவரை மிரட்டியது. இந்த அன்புத் தலைவரைப் பற்றி என்ன சொல்ல முடியும்? தளராத குட்வின் பணியின் விளைவுதான் A Team of Rivals: The Political Genius of Abraham Lincoln. லிங்கனின் தலைமைத்துவ பாணி பற்றிய அவரது புதிய கண்ணோட்டம், அதைச் சிறந்த மற்றும் மதிப்பாய்வு செய்யப்பட்ட புத்தகமாக உருவாக்கியது.

அப்போஸ்தலராகிய யோவான் இயேசுவின் ஊழியம் மற்றும் பாடுகள் பற்றிய தமது சுவிசேஷத்தை எழுதுகையில், வித்தியாசமான சவாலை எதிர்கொண்டார். யோவானின் நற்செய்தியின் இறுதி வசனம், "இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்." (யோவான் 21:25) என்கிறது. யோவானிடம் அதிகமான காரியங்கள் இருந்தன. 

எனவே யோவானின் உத்தியானது, அவருடைய சுவிசேஷம் முழுவதும் இயேசுவின் "நானே" கூற்றுக்களை ஆதரிக்கும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட அற்புதங்களில் (அடையாளங்கள்) மட்டுமே கவனம் செலுத்துவதாகும். ஆயினும்கூட, இந்த உத்திக்குப் பின்னால் இந்த நித்திய நோக்கம் இருந்தது: "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது " (வச. 31). மலைபோன்ற ஆதாரங்களில், இயேசுவை நம்புவதற்கு யோவான் ஏராளமான காரணங்களைச் சொன்னார். இன்று அவரைப் பற்றி யாரிடம் சொல்ல முடியும்?

மக்கள் கூட்டம்

தத்துவஞானியும் எழுத்தாளருமான ஹேன்னா அரெண்ட் (1906-75), “சரித்திரத்தில் மனிதர்கள் மிகவும் பலம்வாய்ந்த பேரரசர்களையும் எதிர்த்து அவர்கள் முன்பு தலைவணங்க மறுத்திருக்கின்றனர்” என்று குறிப்பிடுகிறார். மேலும், “அதில் சிலர் மக்கள் கூட்டத்தை எதிர்க்கவும், கலகக்கார கூட்டத்திற்கு முன் துணிச்சலாய் நிற்கவும், ஆயுதமில்லாமல் அவர்களின் வெறித்தனமான செய்கைகளை மேற்கொள்ளவும் துணிந்திருக்கின்றனர்” என்று சொல்லுகிறார். அரெண்ட் ஒரு யூத பெண்மணியாக, அவளுடைய சொந்த தேசமான ஜெர்மனியில் இதை நேரில்  பார்த்திருக்கிறார். மக்களால் புறக்கணிக்கப்படுவது என்பது பயங்கரமான ஒரு காரியம். 

பவுல் அப்போஸ்தலரும் அதுபோன்ற ஒரு புறக்கணிப்பை அனுபவித்திருக்கிறார். பரிசேயனாகவும் யூத போதகராகவும் பயிற்சிபெற்ற அவர், உயிர்த்தெழுந்த இயேசுவை சாட்சியிட்டபோது, அவருடைய வாழ்க்கை தலைகீழாய் மாறியது. கிறிஸ்தவர்களை துன்பப்படுத்தும்பொருட்டு தமஸ்குவுக்கு பவுல் கடந்துபோகிறான் (அப்போஸ்தலர் 9). அவருடைய மனந்திரும்புதலுக்கு பின்னர், அவர் தம்முடைய சொந்த ஜனத்தினால் புறக்கணிக்கப்பட்டார். அவர்களால் அவருக்கு நேரிட்ட துன்பங்களை பவுல் தன்னுடைய 2 கொரிந்தியர் நிருபத்தில் குறிப்பிட்டுள்ளார். அவற்றில், “அடிகள்” மற்றும் “காவல்கள்” ஆகியவைகள் உள்ளடங்கும் (6:5).  

அந்த புறக்கணிப்பை கோபத்துடனும் கசப்புடனும் கையாளுவதற்கு பதிலாக, அவர்கள் தேவனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பவுல் விரும்பினார். அவர் எழுதும்போது, “எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது... மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே” (ரோமர் 9:1-3) என்று சொல்லுகிறார். 

தேவன் நம்மை அவருடைய குடும்பத்தில் வரவேற்கும்போது, நம்முடைய சத்துருக்களையும் அவருடைய குடும்பத்தில் சேர்த்துக்கொள்ளட்டும். 

நான் மணி சத்தம் கேட்டேன்

1863 ஆம் ஆண்டு, ஹென்றி வாட்ஸ்வர்த் லாங்பெல்லோ எழுதிய  "கிறிஸ்துமஸ் தினத்தன்று மணியோசைக் கேட்டேன்"  என்ற பாடல், பொதுவான கிறிஸ்துமஸ் பாடலை  போன்றதல்ல. கிறிஸ்துமஸின் சந்தோஷமும், களிப்பும் இருக்கவேண்டிய வரிகளில், புலம்பலும், அழுகையும் இருந்தது. "விரக்தியில் நான் தலைகவிழ்ந்தேன், பூமியில் சமாதானம் இல்லையென்றேன், வெறுப்பு வலிதாய் உள்ளதால், அது பூமியிலே சமாதானம் என்ற பாடலை பரிகசிக்கிறது". எனினும் இந்த புலம்பல், நம்பிக்கைக்கு நேரே பயணித்து "தேவன் மரித்துவிடவில்லை, அவர் தூங்கவும் இல்லை, தீமை தோற்று சத்தியம் மேற்கொண்டு, மனுஷர்மேல் பிரியமும் பூமியிலே சமாதானமும் உண்டாகும்" என வாக்குறுதி அளிக்கிறது.

புலம்பலிலிருந்து நம்பிக்கை தோன்றும் இந்த வகையான வேதத்தின் புலம்பல், சங்கீதங்களிலும் காணப்படுகின்றது. சங்கீதம் 43 இல், சங்கீதக்காரன் தனக்கு எதிராய் வரும் சத்துருக்களைக் குறித்துப் புலம்புவதில் துவங்குகிறது (வ.1) மேலும், அவனுடைய தேவன் அவனை மறந்துவிட்டது  போல அவனுக்குத் தோன்றியது (வ.2). ஆனால் சங்கீதக்காரன் புலம்பிக்கொண்டே இருக்கவில்லை; தன்னால் முழுவதுமாய் புரிந்துகொள்ள முடியாத, ஆனால் தான் நம்புகிற தேவனை நோக்கி, "என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்." (வ.5) என்று பாடுகிறான்.

நமது வாழ்விலும் புலம்புவதற்கு அநேக காரணங்கள் உண்டு, அவைகளை அவ்வப்போது நாம் அனுபவிக்கிறோம். ஆனால் அந்தப் புலம்பல் நம்மை நம்பிக்கையின் தேவனுக்கு நேரே நடத்த நாம் அனுமதித்தால், நமது கண்ணீர் ஆனந்தக் கண்ணீராகும்.

சாக்ரடிக் கிளப்

1941 இல், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சாக்ரடிக் கிளப் என்று ஒன்று நிறுவப்பட்டது. இது கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள் மற்றும் அஞ்ஞானவாதிகள் ஆகியோருக்கு இடையே விவாதத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு தோற்றுவிக்கப்பட்டது.

ஒரு மதச்சார்பற்ற பல்கலைக்கழகத்தில் மார்க்கத்தைக் குறித்த விவாதம் புதியது அல்ல. ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சாக்ரடிக் கிளப்பின் பதினைந்து ஆண்டுகள் தலைவராக இருந்தவர், சிறந்த கிறிஸ்தவ அறிஞர் சி. எஸ். லூயிஸ். கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையானது, கடும் எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடியது என்று அவர் நம்பினார். இயேசுவை நம்புவதற்கு சரியான பகுத்தறிவு ஆதாரம் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.

ஒரு விதத்தில், உபத்திரவத்தினால் சிதறிக் கிடக்கும் திருச்சபை விசுவாசிகளுக்கு பேதுருவின் ஆலோசனையை லூயிஸ் நடைமுறைப்படுத்தியிருக்கக்கூடும், “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்” (1 பேதுரு 3:15). பேதுரு இரண்டு முக்கிய குறிப்புகளை கூறுகிறார்: கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பதற்கு நமக்கு நேர்த்தியான காரணங்கள் உள்ளன. மேலும் நமது நியாயத்தை “சாந்தத்தோடும் வணக்கத்தோடும்” முன்வைக்க வேண்டும்.

கிறிஸ்துவை நம்புவது என்பது மார்க்கத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியோ அல்லது சுய விருப்பமோ கிடையாது. நம்முடைய விசுவாசமானது, சரித்திரப்பூர்வமாகவும், இயேசுவின் உயிர்த்தெழுதலின் ஆதாரங்களினாலும், சிருஷ்டிகரைப் பிரதிபலிக்கும் சிருஷ்டிப்புகளினாலும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாம் தேவனுடைய ஞானத்தையும் அவருடைய ஆவியின் பெலத்தையும் சார்ந்துகொள்ளும்போது, நம்முடைய மேன்மையான விசுவாசத்தை நம்புவதற்கான காரணங்களை நாம் அறியக்கூடும்.